Breaking News

TNPSC GROUP 4 தமிழ் இலக்கணம் - தொடை

ADSENSE HERE!

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின்
சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

தொடை வகைகள்
தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,
1. மோனைத் தொடை
2. இயைபுத் தொடை
3. எதுகைத் தொடை
4. முரண் தொடை
5. அளபெடைத் தொடை
6. அந்தாதித் தொடை
7. இரட்டைத் தொடை
8. செந்தொடை
என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

தொடை விகற்பங்கள்
மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.
1. அடி
2. இணை
3. பொழிப்பு
4. ஒரூஉ
5. கூழை
6. மேற்கதுவாய்
7. கீழ்க்கதுவாய்
மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

1. மோனைத் தொடை
மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் ஆகும். அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே ஆகும். சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.

1.1சீர்மோனைகள்
1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.

2. கற்க கசடற கற்றவை கற்றபின்
இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.

1.2அடிமோனைகள்
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.

அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.

2. இயைபுத் தொடை
ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்து அல்லது இறுதிச் சொல் ஒத்து வரும்போது அது இயைபுத் தொடை என்று கூறப்படுகின்றது. ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றி வந்தாலும், அடியின் இறுதிச் சொல்லும் அவ்வடியில் வரும் சீர்களின் சொற்கள் ஒன்றி வந்தாலும் அது இயைபுத் தொடையேயாகும். இதன் படி ஒரு செய்யுளில் இயைபுத் தொடை நான்கு வகையில் அமைய முடியும்.

1. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றுதல்.
3. ஒரு அடியிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றுதல்.
4. ஒரு அடியில் வரும் இறுதிச் சொல் அந்த அடியில் வரும் இன்னொரு சீரிலாவது ஒன்றி வருதல்.

எடுத்துக்காட்டுகள்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
மேற்கண்ட பாடலிலே முதல் மூன்று அடிகளிலும் வரும் இறுதி எழுத்துக்கள் (னை) ஒன்றி இருப்பதனால் இது ஒரு இயைபுத் தொடை கொண்ட பாடலாகும். இது தவிர முதலாம், மூன்றாம் அடிகளில், இறுதி எழுத்துடன் அதே அடியிலுள்ள வேறு சீர்களின் இறுதி எழுத்துக்களும் ஒன்றுவதால் இது அந்த வகையிலும் கூட இயைபுத் தொடை கொண்ட ஒரு பாடலாக அமைகின்றது.

3. எதுகை தொடை
யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
என்பது தொல்காப்பியர் கூற்று.
எதுகை வகைகள்
எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

4. முரண் தொடை
செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின் முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம்.

5. அளபெடைத் தொடை
செய்யுள்களில் அடிகளில் அளபெடை அமைய வருவது அளபெடைத் தொடை ஆகும். எழுத்துக்கள் தமக்குரிய மாத்திரைகளுக்கு அதிகமாக அளபெடுத்து (நீண்டு) ஒலிப்பது அளபெடை. நயம் கருதி இவை செய்யுள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனை, எதுகை போன்ற பெரும்பாலான தொடைகளைப் போலவே அளபெடைத் தொடையும் செய்யுள் அடிகளின் முதற் சீரிலேயே அமைகின்றன.

ஒஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஎம் இதற்பட் டது.
என்னும் குறளில் அளபெடைத்தொடை அமைந்துள்ளது காண்க. இங்கே அடிகளின் முதற் சீரின் முதல் எழுத்தே அளபெடுத்து அமைந்துள்ளது. எனினும் அச் சீரின் எவ்வெழுத்து அளபெடுத்து அமைந்தாலும் அது அளபெடைத் தொடையே ஆகும்.

6. அந்தாதித் தொடை
ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.

ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி எனப்படலாம்.

எடுத்துக்காட்டுகள்
வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே

மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

7. இரட்டைத் தொடை
செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.

8.செந்தொடை
மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.
ADSENSE HERE!

No comments:

Post a Comment